torsdag 8. februar 2018

ஆயிரம் கண்கள் வேண்டுமே
















ஆயிரம் கண்கள் வேண்டுமே!

ஆயிரம் கண்கள் வேண்டுமே, 
இப்பாரினில் ஆனந்தப் புன்னகைக் கோலங்கள் கண்டிட, 
மாதா உம் பாதத்தில் மாதவப் பிள்ளைகள் 
சீர் கொண்டு ஏற்றிய,பார் போற்றும் வெற்றிகள் 
கண்ணூடு பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டுமே...

பத்திமா மாதா பெயர் கொண்ட எங்கள், 
பேசாலைப் பள்ளியின் பேர் சொல்லும் பிள்ளைகள், 
தடகளச் சாதனையைத் தரணியில் பொறிக்கையில், 
அலை கடல் கூட்டமும் அதிர்ந்திங்கு ஆடுமே 
ஆனந்தக் கழிப்பினில் கும்மிகள் போடுமே!

வானத்து அதிதூதா், பேசாலைப் பதி மீது மூவர்ணக் 
கொடியோடு களமாடும் வேளையிலே, எம் கிராமத்துக் 
குடியாவையும், விளையாட்டுத் திறன் காண்கவே படை
சூழ்ந்திடும் நடு வீதியிலே, ஊர் தடுமாறிடும் சனப் பீதியிலே.. !

தனி ஆளுமை , சமயோசித, திறனாளர்கள் நடுவே, 
அணியாய் தம் கொடியேந்தியே தனியாய் படை விரையும், 
இசை வாத்தியம் திசை நான்கிலும் கசையாய் பட்டுத் தெறிக்க , 
அசைந்தாடியே கொடி ஏறிடும் மிசை வானிலே அழகாய்!

விண்மீன் காட்டின் வெண்மதிக் குழந்தைகள் 
பால்வெளி நுழைகையில், பிரபஞ்சத் தூரிகை 
மலர்ச் செண்டு தனை அள்ளி மைதான மடி மீது, 
துதி பாடி மழை தூவும், இயல் நாட்டிய எழில் 
காட்சிகள் இசையோடிங்கு ஜொலிக்க தழல் 
காற்றினில் குளிர் சுவாசங்கள் மனதை வந்து மயக்கும்.

தசையாடிட, திசை மூன்றிலும் இளையோர் தடம் பதித்து , 
ஒளியாண்டுகள் புயல் வேகத்தை இரு காலிலும் பொருத்தி , 
தரைமீதினில் தளராமலே அடி நூறினை பதித்து
அரியாசன சுழல் கோப்பையை அழகாய் தொட்டு 
முகர்ந்தால் அகவானிலும் நிழல் தோன்றுமே 
அழியாப் புகழ் மெருகால்..


# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...